தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380 ஆக உயர்ந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது தேசிய அளவில் கொரோனா பாதித்துள்ள மாநிலங்களில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மேலும் சில வழக்குகள் தேசிய தலைநகரில் கண்டறியப்பட்ட பின்னர் ஹரியானா டெல்லியினுடனான தனது எல்லையில் கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. குர்கான் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களுக்கு பயணத்தினை ஹரியானா தடுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சோனிபட் மற்றும் ஜஜ்ஜர் ஆகியவை சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்கு ‘பாஸ்' தேவைப்படும். சுகாதாரப் பணியாளர்கள், ஊடக ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்களுக்கு உட்பட பாஸ் வைத்திருக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய நகரங்களில் இதே போல கட்டுப்பாடுகள் முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதுவரை சோனிபட் மற்றும் ஜஜ்ஜார் எல்லைகள் மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், குர்கான் மற்றும் ஃபரிதாபாத் எல்லைகளில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளதாகவும் ஹரியானா காவல்துறைத் தலைவர் மனோஜ் யாதவா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பணிபுரிந்து தங்கள் மாநிலமான ஹரியானாவுக்கு திரும்பிய பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியதால் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“டெல்லியில் பணிபுரியக்கூடியவர்களுக்கு அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என டெல்லி முதல்வருக்கு நான் கோரிக்கை விடுக்கின்றேன். தற்போது ஹரியானாவில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே டெல்லியிலிருந்து ஹரியானா செல்ல பாஸ் வழங்கக்கூடாது“ என விஜ் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மாதம் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதம் சார்ந்த நிகழ்வு கொரோனா தொற்று பரவல் மையமாக உருவெடுத்துள்ளதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த மதம் சார்ந்த நிகழ்வில் பங்கேற்றுவிட்டு ஹரியானா திரும்பிய 120 பேரை நாங்கள் குணப்படுத்திவிட்டோம். ஆனால், டெல்லியுடன் தொடர்புடைய ஏராளமானோர் கொரோனா தொற்று நோயாளிகளாக உள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். டெல்லியில் தொற்று பரவல் மிக பரந்துபட்ட அளவில் உள்ளது. காவல்துறை ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு உதாரணமாகும் என விஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா அமைச்சரின் இந்த கருத்திற்கு டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். “ஹரியான அமைச்சரின் கருத்து தவறானது. டெல்லியின் எல்லைப் பகுதியில் வேலை செய்யக்கூடிய பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.“ என ஜெயின் கூறியுள்ளார்.
ஹரியான மாநிலத்தில் கொரோனா தொற்றால் 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 24 வெளிநாட்டினரும் உள்ளனர். இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.