டெல்லியில் இன்று முதல் மதுபானங்களுக்கு 70 சதவீதம் சிறப்பு வரி விதிக்கப்படும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த புதிய வரியை, 'கொரோனா சிறப்பு கட்டணம்' என்று கூறிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுக்கடைகளை காலை 9 மணி முதல் மாலை 6.30 வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் நேற்றைய தினம் கேட்டுக்கொண்டார்.
இந்த 70 சதவீத வரியானது, எம்.ஆர்.பி விலையிலிருந்து, விதிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு மது பாட்டிலின் எம்.ஆர்.பி விலை ரூ.1,000 என்றால், அதன் விலை தற்போது சிறப்பு வரியுடன் சேர்த்து 1,700ஆக விற்பனை செய்யப்படும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதன் காரணமாக கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில், நேற்றைய தினம் முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
தொடர்ந்து, ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்ட தொழில் பாதிப்பு மற்றும் வருமான இழப்பை ஈடுகட்ட மதுவிற்பனைகள் மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி அமைச்சரவையில் மதுபானங்களுக்கு 70 சதவீத வரி உயர்த்துவது குறித்து நேற்று காலை ஆலோசிக்கப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊரடங்கின் காரணமாக அரசின் வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்.2019ல் டெல்லி அரசு 3,500 கோடி வருவாய் ஈட்டியதாகவும், ஆனால் தற்போது ரூ.300 கோடி மட்டுமே ஈட்டியதாக தெரிவித்தார்.
டெல்லியில், சந்தைகளில் அமைந்துள்ள மதுபானக்கடைகள், தவிர தனி கட்டிடத்தில் உள்ள மதுபானக் கடைகள் மட்டுமே டெல்லியில் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
அரசும் மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்படும் என்பது தங்களுக்கு தெரியாது என்று பலரும் கூறினர்.
நேற்றைய தினம் மதுக்கடைகள் திறந்த ஒருசில மணி நேரத்தில், சமூக விலகலை கடைபிடிக்காமல், ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால், பல இடங்களில் அதிகாரிகள் மதுக்கடைகளை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.