This Article is From Dec 27, 2018

துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் தம்பி ஓ.ராஜா ஆவின் தலைவராக பதவியேற்பு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை ஆவின் தலைவராக ஓ.ராஜா இன்று பதவியேற்றுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் தம்பி ஓ.ராஜா ஆவின் தலைவராக பதவியேற்பு!

முன்னதாக, அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாடை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா (பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர்) கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளின் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 5 நாட்களில், கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.ராஜா (பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர்) தனது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், மீண்டும் உறுப்பினராகக் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்ட ஓ.ராஜா மதுரை ஆவின் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

.