This Article is From Jun 12, 2019

அதிமுக ஆலோசனைக் கூட்டம்- நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்- முழு விவரம் உள்ளே!

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது

அதிமுக ஆலோசனைக் கூட்டம்- நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்- முழு விவரம் உள்ளே!

இந்தக் கூட்டத்தில் அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

ஆளும் அதிமுக-வின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தீர்மானம் 1:

மக்களவைப் பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் 2:

மக்களவைப் பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணியின் வெற்றிக்கு அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் 3:

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுக-வுக்கு அளித்தமைக்கு இந்தக் கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் 4:

தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, மகத்தான வெற்றியைப் பெற்றிட இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்தக் கூட்டம் சூளுரைக்கிறது.

தீர்மானம் 5:

தமிழ்நாட்டின் தன்னிகரில்லா மக்கள் இயக்கமான அதிமுக, கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் வகுத்துத் தந்த ஏழை, எளியோருக்கும், தாய்க்குலத்திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், அம்மா வழியில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது. 

.