This Article is From Feb 07, 2019

நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்த 'வர்மா' திரைப்படம் கைவிடப்பட்டது

புதிய டீமுடன் வர்மா படம் மீண்டும் உருவாக்கப்படவுள்ளது. இதில் பாலா நீக்கப்பட்டுள்ளார். ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. படம் ஜூனுக்கு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்த 'வர்மா' திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதே பெயரில் ஏற்கனவே இருந்த நடிகர், நடிகை, இயக்குனருக்கு பதிலாக புதிய டீமின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் வர்மா படத்தில் ஹீரோவாக துருவ் தொடர்கிறார்.

தெலுங்கில் வெளியாக இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற 'அர்ஜுன் ரெட்டி'-யின் தமிழ் ரீமேக்கில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து வந்தார். உச்ச நடிகராக விக்ரம் இருந்து வரும் நிலையில், அவரது மகனின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ரெட்டியில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். இந்தப்படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. அவருக்கு விக்ரமின் மகன் டஃப் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

வர்மாவின் ஃபர்ஸ்ட் லுக் வந்தபோது, அது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. சில வாரங்களுக்கு மீம் கிரியேட்டர்கள் வர்மாவின் ஃபர்ஸ்ட் லுக்கை படாதபாடு படுத்தினர். துருவை டி.ஆருடன் ஒப்பிட்டு வெளிவந்த மீம்ஸ்கள் ட்விட்டர், பேஸ்புக்கில் ஹிட்டடித்தன. இந்த நிலையில் கடந்த மாதம் 9-ம்தேதி வர்மாவின் ட்ரெய்லர் வெளியானது. இதனைப் பார்த்தவர்கள் துருவின் நடிப்பு ஓகே என்ற அளவில் விமர்சனம் செய்திருந்தனர். படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து இ4 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இ4 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை வர்மா என்ற பெயரில் எடுத்து வந்தது. படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு எங்களிடம் அளிக்கப்பட்ட இறுதி வடிவமைப்பு எங்களுக்கு திருப்தியாகப்படவில்லை.

இதற்கு உருவாக்கம் மற்றும் சில விஷயங்கள் காரணம். எனவே இந்த வர்மா திரைப்படத்தை நாங்கள் வெளியிட விரும்பவில்லை. இதற்கு பதிலாக புதிதாக அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்கை புதிய நடிகர்களுடன் தமிழில் எடுத்து வெளியிட விரும்புகிறோம். இதில் துருவ் ஹீரோவாக நடிப்பார். படத்தின் இயக்குனர், ஹீரோயின் உள்ளிட்டோர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Advertisement

எங்களின் இந்த முடிவால் பெரும் பணம் வீணாகியுள்ளது. இருப்பினும் அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் அதே தரத்துடன் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமாகும். எனவே ஓய்வின்றி உழைத்து வர்மாவை 2019 ஜூனில் திரைக்கு கொண்டு வருவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement