This Article is From Jan 29, 2019

95% சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா? டிடிவி தினகரன் கேள்வி

95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக அரசு கூறுவது உண்மையில்லை என அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

95% சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா? டிடிவி தினகரன் கேள்வி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 8வது நாளாக நடந்து வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இன்று பணியில் சேராவிட்டால், பணியாற்றிய இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தை தடுக்க நினைக்காமல் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். ஆசிரியர்கள் விவகாரத்தில் அதிகார மமதையில் தமிழக அரசு செயல்படக்கூடாது.

95% சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக அரசு கூறுவது உண்மையா? பலர் போராடி வரும் நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் தவறான தகவல் தருகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தேசிய கட்சிகளுடன் அமமுக கூட்டணி அமைக்காது. எங்கள் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு முடிந்து விட்டது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

.