This Article is From Jan 03, 2019

திருவாரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா?

இதனைத் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதிஅந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது

திருவாரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா?

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது என அப்பகுதியின் திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கலைஞரின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதிஅந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார்? என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீதும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணன், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.

எனினும், திமுக ஆலோசனை நடத்தி தலைவர் ஸ்டாலின் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவரை வெற்றி பெற வைப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

.