திமுக உள்ளிட்ட தமிழக எதிர்கட்சிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி கோயம்புத்தூரில் போராட்டம் நடத்தினர். ஊழல் புகாரில் சிக்கியுள்ளதை சுட்டிக் காட்டி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
சமீபத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி ராஜேந்திரன் மற்றம் பலரது வீட்டில் சோதனை நடத்தியது சிபிஐ. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், சீக்கிரமே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சாதகமாக பல கோடி ரூபாய் டெண்டர்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தத் தகவல்களை தனியார் ஆங்கில தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியது.
இப்படி தமிழக அமைச்சர்கள் மீதே தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருவதால், இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்கட்சிகள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளன.
கோயம்புத்தூரில் பெரும் போராட்டம் நடந்து வரும் நிலையில், சென்னையில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தலைமையில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் அக்கட்சியினர்.