பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவெடுப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது-
கடந்த 2014-ல் பாஜக மத்தியில் வெற்றி பெற்றிருந்தபோது பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே. அவரை அழைத்ததால் அன்றைக்கு கருப்புக் கொடி காட்டினோம்.
விரைவில் மோடியின் ஆட்சி முடிவடைய உள்ளது. இன்றைக்கு மதுரை வரும் அவருக்கு கருப்புக் கொடி காட்டுகிறோம். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
நாட்டை ஆள்வது யார் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானிப்பார். டெல்டா மாவட்டத்தின் நீர் ஆதாரங்களை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விரைவில் மத்திய பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்.
இவ்வாறு வைகோ கூறினார்.