This Article is From Jun 22, 2019

தண்ணீர் பஞ்சம்: தமிழகம் முழுவதும் இன்று திமுக போராட்டம்!

தமிழகத்தின் தண்ணீர் போர்களும், கிணறுகளும் வறண்டு காணப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் தனியார் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தண்ணீர் பஞ்சம்: தமிழகம் முழுவதும் இன்று திமுக போராட்டம்!

கிழக்கு சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பங்கேற்றார்.

Chennai:

தமிழக அரசின் அலட்சியமும் மற்றும் நிர்வாக திறன்குறைவே தண்ணீர் தட்டுபாட்டிற்கு காரணம் என குற்றசாட்டிய திமுக, தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது. 

இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீர் சுமார் 40 சதவீதம் அளவிற்கு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்படி, தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சென்னைக்குக் குடிநீர் அளிக்கும் 4 ஏரிகளும் வறண்ட நிலையில் இருக்கின்றன. மழைப் பொழிவு குறைவாக இருந்ததனால்தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த ஏரிகளில் 3 டிஎம்சி தண்ணீர் இருந்தது என்று கூறினார். 

இதனிடையே, மழையில்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. ஆதலால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்வதற்கு, ஒரு அரசு தேவையில்லை. ஊடகங்களும், மக்களுமே இதை தான் சொல்கிறார்கள். இதையே திரும்ப சொல்வதற்காகவா தமிழக அரசு உள்ளது? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்னையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வருகிறது. அந்தவகையில், கிழக்கு சென்னையில் எம்.பி தயாநிதி இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். 

.