This Article is From Aug 31, 2018

‘அடிமைத்தனம் விட்டொழிப்போம்..!’- உடன்பிறப்புகளுக்கு திமுக முக்கிய வேண்டுகோள்

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்பான வேண்டுகோளைத் தவறாது நிறைவேற்றுவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

‘அடிமைத்தனம் விட்டொழிப்போம்..!’- உடன்பிறப்புகளுக்கு திமுக முக்கிய வேண்டுகோள்

திரேவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், கழக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் திமுக தலைமைக் கழகம் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், செயல் தலைவராகப் பொறுப்பேற்ற போதே, கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தனது காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்மானம் - சுயமரியாதை - பகுத்தறிவு செறிந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை அடையாளமாக, நெஞ்சம் நிமிர்த்தி அன்பு ததும்ப “வணக்கம்” செலுத்துவதே தலைமைக்குத் தரும் மரியாதை என்பதையும் தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போதே குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அவர் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், வாழ்த்து தெரிவிக்க வருகின்ற பலரும், ஆர்வ மிகுதியால் அவர் காலில் விழ

முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனத் தலைமைக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்து தெரிவிப்பதே, திராவிட முன்னேற்றக் கழகம் போற்றி வளர்த்துவரும் பண்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும் செயலாகும்.

எனவே தலைவர் மு.க.ஸ்டாலினின் காலில் விழ எத்தனித்து, அவருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, கழகத் தலைவரைக் காணவரும்போது பரிசளிக்க விரும்புவோர், ஆடம்பரம் மிகுந்த சால்வைகள் - மாலைகளைத் தவிர்த்து, அறிவு வளர்ச்சிக்குத் துணை நிற்கும் புத்தகங்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிகழ்ச்சிகளிலும் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் அதிக அளவிலான பேனர்கள் நிச்சயமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தலைவர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். நிகழ்ச்சி நடைபெறும் இடம் - நேரம் - நாள் இவற்றை அறிந்து கொள்ள முக்கியமான இடங்களில் மட்டும் வைத்திட ஏதுவாக, ஒரு சில பதாகைகள் போதும் என்பதையும், ஆடம்பர பேனர்களுக்குப் பதில், கழகத்தின் கொள்கை பட்டொளி வீசிப் பறக்கும் வகையில் இருவண்ணக் கொடியும் தோரணமும் விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதனைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கட்டடாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தலைமைக் கழகம் மீண்டும் வலியுறுத்துகிறது.

பேனர்கள் போன்ற ஆடம்பரங்களையும், காலில் விழுந்து கவனத்தைக் கவர்வது போன்ற அடிமைத் தனங்களையும் விட்டொழிப்போம். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்பான வேண்டுகோளைத் தவறாது நிறைவேற்றுவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

.