This Article is From May 23, 2020

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது!

சென்னை ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச்  சென்று போலீசார் அவரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது!

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போலீசார் திடீரென கைது செய்துள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் இன்று அதிகாலை சென்ற போலீசார் அவரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. 

இதைத்தொடர்ந்து, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் ஆர்.எஸ். பாரதி பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, தன் மீதான கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ் பாரதி, கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்.15 ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது.  

கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும். யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

.