தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மரணம் இன்று வரை விலகவில்லை. அது குறித்து திமுக ஆட்சிக்கு வந்தால் முறைப்படி விசாரிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், “துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம்தான், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறினார். அது குறித்து நீதி விசாரணை அவசியம் என்று வலியுறுத்தினார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. 3 மாதத்தில் அந்த ஆணையம், தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால், 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை ஆறுமுகசாமி ஆணையம், தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதுவரை அந்த ஆணையத்தின் ஆயுட்காலம் 7 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு தமிழக முதல்வர் மர்மமான முறையில் மறைந்துள்ளார். எனவே அது குறித்து திமுக ஆட்சிக்கு வரும்போது முறைப்படி விசாரிக்கப்படும் என்பது உறுதி,” எனத் திட்டவட்டமாகப் பேசினார்.
2016 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 ஆம் தேதி, ஜெயலலிதா, சிகிச்சைப் பலனின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் இயற்கை ஏந்தினார். இதைத் தொடர்ந்து அதிமுக பிளவுபட்டது. 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அதிமுக பிரிவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அதிமுக பிரிவும் செயல்பட்டு வந்தன.
பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணி, ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்,' என்று வலியுறுத்தியது. இரு அணியினரும் ஒன்றாகச் சேர்ந்த பின்னர்தான், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் இன்று வரை தனது அறிக்கையைக் கொடுக்கவில்லை.