This Article is From Jun 06, 2019

நீட் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, திமுக உரிய தீர்வு காண முயற்சிக்கும்: மு.க.ஸ்டாலின்

நீட் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, திமுக உரிய தீர்வு காண முயற்சிக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, திமுக உரிய தீர்வு காண முயற்சிக்கும்: மு.க.ஸ்டாலின்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற மத்திய பா.ஜ.க அரசு, இன்னமும் தமிழ்நாட்டில் நடக்கும் “நீட்”தற்கொலைகளை அமைதியாகவும், அராஜக மனப்பான்மையுடனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைஷியா ஆகியோரின் அதிர்ச்சியளிக்கும் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் என் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதயத்தை நொறுக்கும் அந்த இளம் மாணவிகளின் அகால மரணம் பெற்றோரை மட்டுமல்ல - தமிழக மக்கள் அனைவரையும் நீங்காத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக இளைஞர்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் தேர்வு எவ்வளவு மோசமாகப் பாழ்படுத்தி, சிதைத்து- இளம் மாணவ, மாணவியர் வாழ்வில் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதைவிட வேறு அபாயகரமான- அதிர்ச்சிதரவைக்கும் எடுத்துக்காட்டு தேவையில்லை. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசோ “கருணையை” க்கசக்கி எறிந்து விட்டு, “இதயத்தை தூக்கி ஒரு ஓரத்தில் வைத்து விட்டு” துவக்கத்திலிருந்தே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை துளிகூட எண்ணிப் பார்த்து உணர மறுக்கிறது.

“கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் உள்ள ஏழை மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி “நீட் வழக்கில்” அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டது, தமிழ்நாட்டில் முதலில் நீட் தேர்வுக்குப் பலியான அனிதாவின் மரணத்திலிருந்து இன்றைக்கு நேர்ந்துள்ள ரிதுஸ்ரீ, வைஷியா துரதிருஷ்டவசமான மரணங்கள் வரை தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நீட் தேர்வின் போதும், தமிழக மாணவ- மாணவியர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதை ஆகிவருவது நாட்டிற்கும் நல்லதல்ல; தமிழகத்திற்கும் நல்லதல்ல என்பதை மத்திய ஆட்சியாளர்கள் உணர்ந்து திருத்திக் கொள்ளும் வகையில், எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் “நீட் பிரச்சினையை”நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக எழுப்பி- உரிய தீர்வு காண முயற்சிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.