மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தமிழகம் வருகை தந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்ற ராகுல், அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, கேள்வி கேட்ட மாணவி ஒருவரிடம் தன்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்றும் ராகுல் என்றே அழைக்கலாம் என்றும் கூறி மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு பணிகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார். அப்போது, மோடியை கட்டிபிடித்தது ஏன் என்று மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “அன்புதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எல்லா மதமும் அன்பைத்தான் போதிக்கின்றன.
யார் வெறுப்பை உமிழ்வார்கள் தெரியுமா..? யாருக்கு அன்பு கிடைக்கவில்லையோ அவர்கள்தான் வெறுப்பை உமிழ்வார்கள். பிரதமர் மோடிக்கு ஏனோ அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய அன்பு கிடைக்காமலேயே போனது. நான் அந்த அன்பை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் கட்டிப்பிடித்தேன் என்று கூறினார். மேலும், பணமதிப்பிழக்கம், காஷ்மீர் விவாகரம் என மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான பதிலை தந்து மாணவிகளுக்கு பெரும் உற்சாகம் அளித்தார்.
கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடல் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. பல்வேறு தரப்பினரும் ராகுல் பேச்சை பாராட்டி வரும் நிலையில், பாஜகவினர் ராகுலின் பேச்சை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,
பெண்களுக்கு 33 சதவீதம் வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 50 வருடம் ஆட்சியில் இருந்த போது, கையில் அதிகாரம் வைத்திருந்த போது எதையும் கொடுக்கவில்லை. கல்லூரி மாணவிகளிடம் பிரதமரை எதிர்மறையாக விமர்சித்து பேசியது தவறு. அவர் பிரதமரை தவறாக சித்தரித்துள்ளார் என்று நாங்கள் கூற எங்களுக்கு அனுமதி தருவார்களா?
கல்லூரியை அரசியல் களமாக மாற்ற நான் விரும்பவில்லை, நேற்று ராகுல் பேசியது தவறு. 1971ல் அவரது பாட்டி வறுமையே வெளியேறு, அது தான் எனது தாரக மந்திரம் என்றார். வறுமை வெளியேறியதா? தோல்வி அடைந்தவர் ராகுல்.
கல்லூரி மாணவிகளிடம் பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தவறாக சித்தரித்துள்ளார். கல்லூரிகளில் இப்படி எதிர்மறை அரசியலை ராகுல் காந்தி பரப்புவது சரியானது அல்ல என்று அவர் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.