மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நுஷ்ரத் ஜகான் மற்றும் மிமி சக்கரபோர்த்தி. இவர்கள் இருவரும் முன்னாள் நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இவர்கள் இருவரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். கூட்டத் தொடர் முடிந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர்களை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
பலர் அவர்களை கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். சில பத்திரிகையாளர்கள், அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விருப்பப்பட்டுள்ளனர். இருவரும் முதலில் பத்திரிகையாளர்களின் செல்ஃபிகளுக்கு போஸ் கொடுத்துள்ளனர். ஆனால், ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானது.
இதைத் தொடர்ந்து நுஷ்ரத் ஜகான் எம்.பி., “நீங்கள் எங்களைத் தள்ளாதீர்கள் சார். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்” என்று முறையிட்டுள்ளார். அப்படியும் பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாதுகாப்புப் பிரிவினர் சிலர், இரண்டு எம்.பி-க்களையும் பத்திரமாக அவர்களின் வாகனம் வரை அழைத்துச் சென்றனர்.
பாசிர்ஹத் தொகுதியில் இருந்து ஜகான் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார். சக்கரபோர்த்தி, ஜாதவ்பூரில் இருந்து எம்.பி-யாக வெற்றி பெற்றார்.
சில நாட்களுக்கு முன்னர் துருக்கியில் ஜகான், திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண நிகழ்ச்சியில் சக்கரபோர்த்தியும் கலந்து கொண்டதால் இருவரும், பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இருவரும் நேற்றுதான், பதவியேற்றுக் கொண்டனர்.
(ANI தகவல்களுடன்)