Edappadi Palanisamy vs Durai Murugan: தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருக்கையில், திமுக எம்எல்ஏவும் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமார் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தபோது, அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சீறிட்டு எதிர்வாதம் வைத்தார். இது சட்டப்பேரவை வட்டாரத்தில் பரவலாக பரபரக்கப்பட்டு வருகிறது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிரான இந்திய அளவிலான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தது பற்றி குறிப்பிட்டுப் பேசினார். இதற்கு வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமார், விளக்கம் அளித்துப் பேசினார். அவர் ஸ்டாலின் பேசியதைக் குறுக்கிட்டு மிக நீண்ட விளக்கத்தைக் கொடுத்தார்.
இதனால் உஷ்ணமடைந்த துரைமுருகன், “எதிர்க்கட்சியிலிருந்து நாங்கள் பேசும்போது, ஒரு அமைச்சர் அதைக் குறுக்கிட்டு விளக்கம் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், வருவாய் துறை அமைச்சர் மட்டும் பொதுக் கூட்டத்தில் பேசுவது போல உரையாற்றுகிறார்,” என்று கிண்டல் தொனியில் கருத்து கூறினார்.
இதனால் சீற்றமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சட்டசபையின் மூத்த உறுப்பினராக இருக்கும் துரைமுருகன் இப்படி சொல்வது வருத்தமளிக்கிறது. ஒரு அமைச்சர் இப்படித்தான் பேச வேண்டும், அப்படித்தான் பேச வேண்டும் என்று யாரும் உத்தரவு போட முடியாது. அனைவருக்கும் அவர்கள் கருத்தைச் சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. அதை நீங்கள் தடுக்க நினைத்தால் ஒன்றும் நடக்காது.
எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்க வேண்டிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இப்படி பேசுவது சரியல்ல. தமிழகத்தில் சிஏஏ போராட்டத்திற்கு எதிராக எங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. இந்திய அளவில் நடந்த ஒரு பிரச்னையைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். அதற்குத்தான் குறுக்கிட்டு மிக நீண்ட விளக்கத்தை அளித்தார் வருவாய் துறை அமைச்சர். அப்படி கொடுத்தால்தான் உண்மை செய்தி மக்களுக்கு சென்று சேரும். அதைத் தடுக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது,” என்று தீர்க்கமாகச் சொன்னார்.