This Article is From Oct 04, 2019

கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடிய எடப்பாடி! - மு.க.ஸ்டாலின் கடும் சாடல்

அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி, அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடிய எடப்பாடி! - மு.க.ஸ்டாலின் கடும் சாடல்

இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம் - ஸ்டாலின்

கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடிய எடப்பாடி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். 

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசுகின்றனர். பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையின்போது, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 14 இடங்களில் அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே, தமிழத்தில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம் பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

இதனால், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இது தமிழக அரசியலில் சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி வழங்கினர். விதிகளை பின்பற்றி, மக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்களை வைக்கலாம் என்று கூறினர். 
 


இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில், அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி, அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை. அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. 

இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம். வெட்டி பந்தாக்களிலும், போலிக் கெளரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதலமைச்சரின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்வது மாதிரி எந்தச் சாதனையும் இல்லை என்று கூறியுள்ளார். 
 

.