This Article is From Jan 08, 2019

நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய உயர்கல்வி துறை செயலாளர்! - கைது வாரண்ட் வாபஸ்!

நீதிமன்ற அவமதிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறி, மங்கத்ராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்

நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய உயர்கல்வி துறை செயலாளர்! - கைது வாரண்ட் வாபஸ்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்கல்வி துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து அவருக்கு எதிரான கைது வாரண்ட் திரும்ப பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்.

பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு எதிராக தனியார் கல்லூரிகள் சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் முடிவில் வெளி மாநில மாணவர்களை சேர்க்க மாட்டோம், வெளி மாநிலங்களில் கல்வி மையங்களை திறக்க மாட்டோம் ஆகிய உத்தரவாதங்கள் பல்கலைக்கழகம் தரப்பில் அளிக்கப்பட்டது.

இவை மீறப்பட்டதாக கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மாவை தவிர்த்து மற்ற அதிகாரிகள் ஆஜர் ஆகினர்.

இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறி, மங்கத்ராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான மங்கத் ராம் சர்மா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், தனக்கு எதிரான கைது வாரண்ட்டை திரும்ப பெற வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இதை ஏற்று கைது வாரண்டை திரும்பப் பெற்ற நீதிபதி, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் நடவடிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 24க்கு தள்ளிவைத்தார்.

தொலைதூர கல்வி மையங்கள் துவங்க பல்கலைக்கழக விதிகள் தடை விதித்த போதும், அதை மீறி செயல்படும் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கேள்வி எழுப்பினார்.


 

.