14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் -2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை நெருங்கி சுற்றி வந்த விக்ரம் லேண்டர் தரையிரங்கும்போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அமைதி ஏற்பட்டது.
தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சிவன் முதலில் நரேந்திர மோடிக்கு விளக்கமளித்தார். பின்னர் சந்திராயன் 2 லேண்டர் விக்ரமுடன் தொடர்பு இழந்தது குறித்து வருத்தத்துடன் அறிவிப்பை வெளியிட்டார்.
விக்ரம் லேண்டரின் நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ உயரத்தில் இறங்கிக் கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.” என இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி வெளியேறும் போது அவர் இஸ்ரோ தலைவர் சிவன் முதுகில் தட்டிக் கொண்டு விஞ்ஞானிகளுக்கு ஒரு பேச்சு கொடுத்தார். நம்பிக்கையை இழக்காதீர்கள். தைரியமாக இருங்கள். வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. நீங்கள் அனைவரும் செய்திருப்பது ஒரு சிறிய விஷயம் அல்ல. நீங்கள் நாட்டிற்கும் விஞ்ஞானத்திற்கும். மனித குலத்திற்கும் ஒரு பெரிய சேவையைச் செய்துள்ளீர்கள். நான் உங்களுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து தூர்தர்ஷனுக்கு அவர் அளித்த பேட்டியில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான கடைசி பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படவில்லை. அந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனான தகவல் தொடர்பை இழந்துள்ளோம், பின்னர் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை," அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று அவர் கூறினார்.
விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.
இந்த ஆர்பிட்டர் கருவி ஒரு வருடகால பயன்பாட்டிற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் எரிபொருள் அதிகமாக இருப்பதால் சுமார் ஏழரையாண்டுகள் வரை செயல்படும். இதனால், சந்திரயான்-2 திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது.
பிரதமர் மோடியின், உத்வேகமும், ஆதரவும் பெரும் உதவியாக இருந்தது. "அவரது பேச்சு எங்களுக்கு உந்துதலைக் கொடுத்தது. அவரது உரையில், “அறிவியல் எப்போதும் முடிவுகளை தேடக்கூடாது. அனுபவங்களை தேடவேண்டும். அந்த அனுபவங்கள் முடிவுகளை அளிக்கும்” என கூறிய வார்த்தைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.
இதனிடேய, இஸ்ரோவிலிருந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது, வழியனுப்ப வந்த இஸ்ரோ தலைவர் சிவன், மோடியைப் பார்த்து கண்ணீர் விட்டார். அவரை கட்டித்தழுவி, பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அப்போது, பிரதமர் மோடியும் கண் கலங்கினார். இந்த காட்சி, அனைவரையும் நெகிழ செய்வதாக இருந்தது.