2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவித்துள்ளார்.
“அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மிகவும் விழிப்புடனும் கவனத்துடனும் இருங்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். போலியான கருத்துக் கணிப்புகள் மூலம் பரப்பும் தகவல்களை நம்ப வேண்டாம். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் கடின உழைப்பு வீணாகாது. ஜெய் ஹிந்த்” என்று ட்விட்டர் மூலம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான செய்தியை தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், மொத்தம் இருக்கும் 543 லோக்சபா தொகுதிகளில் 300-க்கு மேல் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தன. காங்கிரஸ் கூட்டணி, 122 இடங்களையும், மற்றவர்கள் 114 இடங்களையும் பிடிப்பர் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, “எனது அருமை காங்கிரஸ் தொண்டர்களே, சகோதரிகளே மற்றும் சகோதரர்களே… வதந்திகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு ஏமாந்து விடாதீர்கள். இந்த அனைத்து விஷயங்களுக்கு மத்தியிலும் நீங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அனைக்கு வெளியே மிக கவனத்துடன் பாதுகாப்பை மேற்கொள்ளுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து எடுத்த முயற்சி நமக்கு நல்ல பயனைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று ஆடியோ மூலம் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் மீரட் மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள், இ.வி.எம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளுக்கு வெளியே விடிய விடிய காவல் காத்தனர். பல இடங்களில் இ.வி.எம் இயந்திரக் குளறுபடி நடந்து வருவதாக புகார் வருவது குறிப்பிடத்தக்கது.