தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக
வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வர உள்ளார்.
ஏப்ரல் 3ம் தேதிவரை சென்னையில் தங்கியிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்த உள்ளார். இதுதவிர அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதேபோன்று, தேர்தல் நடைபெற உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலைமை தேர்தல் ஆணையர் சென்று, தேர்தல் ஏற்பாடுகளை முடுக்கி விடுவார். மேலும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், காவல்துறையினர், செலவின பார்வையாளர்களிடமும் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.