This Article is From May 28, 2019

பிரதமர் மோடிக்கு இனிப்பு ஊட்டிய பிரணாப் முகர்ஜி! 'ராஜ தந்திரி' என மோடி பாராட்டு!!

பிரதமர் மோடியின் ட்விட்டுக்கு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக இருந்த பிரணாப் தற்போது மோடியை புகழ்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் முகர்ஜியை மோடி இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

New Delhi:

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது மோடிக்கு பிரணாப் முகர்ஜி இனிப்புகளை வழங்கி ஆசி வழங்கினார். இந்த புகைப்படங்களை பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவை வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. 

மோடி தனது ட்விட்டர் பதிவில், 'மிகவும் அனுபவம் நிறைந்த பிரணாபை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். மாபெரும் அறிஞராக பிரணாப் இருக்கிறார். நாட்டிற்கு மிகப்பெரும் பங்களிப்பை அளித்த அவர் சிறந்த ராஜதந்திரி' என்று குறிப்பிட்டுள்ளார். 
 


இந்த ட்வீட்டுக்கு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பதில் அளித்துள்ளார். 'மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகுந்த வலிமையுடன் மோடி 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளார். அவர் தனது இலக்குகளை அடைவதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 
 


மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து மூத்த தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்துப் பெற்று வருகிறார். முன்னதாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களை மோடி சந்தித்தார். 

.