டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாஜக 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறினார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், 'டெல்லி மக்களே! ஐ லவ் யூ. உங்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். புதிய ரகமான அரசியலுக்கு இந்த தேர்தல் வெற்றி வித்திட்டுள்ளது. இது பாரத தாய்க்கு கிடைத்த வெற்றி' என்று கூறினார்.
தனது பேச்சில் ஹனுமனையும் குறிப்பிட்ட கெஜ்ரிவால்,'இன்றைக்கு செவ்வாய்க் கிழமை. இது ஹனுமனின் நாள். டெல்லிக்கு ஹனுமன் அருள் பாலித்துள்ளார். ஹனுமனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்' என்று பேசினார்.
டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது ஹனுமனை பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு கெஜ்ரிவால் உரையாற்றினார். இதனை விமர்சித்த பாஜக வெற்றி பெறுவதற்காக இந்துத்துவ அரசியலை கெஜ்ரிவால் கையில் எடுக்கிறார் என்று கூறியது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்பதாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி. உங்களின் நலனுக்காக கட்சி தொடர்ந்து உழைக்கும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள்.
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி டெல்லி மக்களுக்கு நிறைவேற்றும் என நம்புகிறேன். பாஜக தோல்விக்கு நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வோம். எதிர்காலத்தில் இதுபோன்ற பின்னடைவு ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.' என்று கூறியுள்ளார்.
கடந்த 2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 63 இடங்களும், பாஜகவுக்கு 7 இடங்களும் கிடைத்துள்ளன.