தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஒரே கட்ட மக்களவை தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும் என கூறினார். நாட்டின் பிற பகுதிகளில் தேர்தல் ஆணையம் அதுபற்றி முடிவு செய்யும்.
தமிழகத்தில் சட்டஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதன் காரணமாக எந்தவித சச்சரவுகளும் ஏற்படுவதில்லை, ஆனால் வட இந்தியாவை பொறுத்தவரை சில மாநிலங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை, அதே போன்று தீவிரவாத பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், தேர்தல் நடத்தும் தேதிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடலாம். எனவே தமிழகத்தில் மக்களவை தேர்தல் முதலில் நடத்தப்பட்டால் வரவேற்கத்தக்கது.
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக அமைக்கும் கூட்டணி மக்களுக்கு ஏற்றதாக இருக்கும். கூட்டணி குறித்து அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.