This Article is From Mar 17, 2019

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் போட்டியிடுகிறாரா ராகுல்காந்தி?

உத்தரபிரதேசம் அமோதி தொகுதியை தவிர்த்து தமிழகத்திலும் ராகுல் போட்டியிட வேண்டும் என்றும் வடமாநிங்களுக்கு மட்டும் சொந்தமானவராக இருந்து விடக்கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் போட்டியிடுகிறாரா ராகுல்காந்தி?

இந்தியாவின் சொத்தாக ராகுல் காந்தி பார்க்கப்படுகிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கூறினார்.

Chennai:

ஏப்.18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தென்மாநிலத்தில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். மேலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என முதன்முதலாக திமுக தான் முன்மொழிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது, உத்தரபிரதேசம் அமோதி தொகுதியை தவிர்த்து தமிழகத்திலும் ராகுல் போட்டியிட வேண்டும். இந்தியாவின் சொத்தாக ராகுல் காந்தி பார்க்கப்படும் ராகுல், வடமாநிங்களுக்கு மட்டும் சொந்தமானவராக இருந்து விடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே பிரதமராக வருவார் என முதல்முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே முன்மொழிந்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.

தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சந்தர்ப்பவாதிகள் ஒன்று சேர்ந்து வருகிற தேர்தலுக்காக தற்காலிகமாக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்கப் போவதில்லை.

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுகிற அமோக ஆதரவு பெற்றிருக்கிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னோடி மாநிலமாக தமிழகம் அணி திரண்டு நிற்கிறது.

மக்களவை தேர்தலில் எதேனும் ஒரு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் மதம், சாதி, எல்லைகளைக் கடந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய மகத்தான தலைவராக விளங்குகிற ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டும் சொந்தமுள்ளவராக கருத முடியாது. அவர் இந்திய மக்களின் சொத்தாக கருதப்படுகிறவர். அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற, நல்லிணக்க கொள்கைகளுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

தமிழக மக்களின் வேண்டுகோளை நிச்சயம் ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்புகிறேன். இத்தகைய போட்டியின் மூலம் வடக்கையும், தெற்கையும் இணைத்து நிற்கிற எழுச்சித் தலைவராக ராகுல்காந்தியை கருதி இந்திய மக்கள் அமோக ஆதரவு வழங்குவார்கள் என்பது உறுதியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

.