பாஜக ஆளும் மாநில முதல்வர்களைப் போல் இல்லாமல் நேர்மையான முதல்வரை டெல்லி பெற்றுள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவாலை ஆம் ஆத்மி கட்சி புகழ்ந்துள்ளது.
டெல்லியில் 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் மின்சார கட்டணம் செலுத்த தேவையில்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு டெல்லி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விவகாரம் மற்ற மாநிலங்களிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இதனை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மாநில தலைவர் மனோஜ் திவாரி, தேர்தலை மனதில் கொண்டு கெஜ்ரிவால் பல்டி அடித்துள்ளார் என்று கூறினார். இதற்கு ஆம் ஆத்மி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி கூறியதாவது-
இலவசர மின்சாரத்தை மனோஜ் திவாரி எதிர்த்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இலவச மின்சாரத்தை மக்களுக்கு வழங்கட்டும். இலவச மின்சாரத்தை ஆம் ஆத்மி அரசால் வழங்க முடியும்.
ஏனென்றால் எங்கள் கட்சி நேர்மையான, ஐஐடிடியில் படித்த முதல்வரான கெஜ்ரிவாலை கொண்டுள்ளது. அவர் அரசின் கொள்கைகளை நன்கு புரிந்துள்ளார். பாஜகவால் இதனை புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அக்கட்சி முதல்வர்கள் நேர்மையானவர்களும் கிடையாது. படித்தவர்களும் அல்ல.
இவ்வாறு அதிஷி கூறினார். டெல்லியில் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் மின் கட்டணம் இலவசம். 201 - 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு 50 சதவீத மானிய விலையில் மின் கட்டணம் விதிக்கப்படும். இந்த அறிவிப்பு இன்று முதல் டெல்லியில் நடைமுறைக்கு வந்துள்ளது.