Tral Encounter: ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையால் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவத்தில், 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
ஜகிர் முசா என்னும் தேடப்பட்டு வரும் தீவிரவாத தலைவரின், நெருங்கிய கூட்டாளியும் இந்த என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார். புல்வாமா மாவட்டத்தின் அரம்போரா கிராமத்தில், பாதுகாப்புப் படையால் இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது.
அரம்போராவில் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்று பாதுகாப்புப் படைக்குத் தகவல் வந்ததை அடுத்து, தேடுதல் வேட்டை ஆரம்பமானது. அப்போது தீவிரவாதிகள், ரோந்துப் பணியிலிருந்த பாதுகாப்புப் படை மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதை அடுத்து, 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மிக அதிகமான ஆயுதங்களை தீவிரவாதிகள் அரம்போராவில் பதுக்கி வைத்திருந்ததாகவும், அவை அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.