சர்வதேச அளவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், எல்லா நாடுகளும் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகரில், சர்கஸ்லிருந்து வெளியேறிய இரண்டு குதிரைகளும், ஒரு வரிக்குதிரையும் நகரினை சுற்றிப்பார்க்க கிளம்பியதைப்போல மிக இயல்பாக சாலைகளில் கார்களோடு ஓடிக்கொண்டிருந்தன.
பாரிஸ் நகரத்திலிருந்து கிட்டதட்ட 20 கி.மீ தொலைவில் உள்ள ஓர்மெஸன்-சுர்-மார்னே நகரில் உள்ள ஒரு சர்க்கஸில் இருந்து தப்பி, அருகில் உள்ள அண்டை நகரமான சாம்பிக்னி-சுர்-மார்னேவுக்கு இந்த மூன்று விலங்குகளும் சென்றிருக்கின்றன என்று அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹஃபிங்டன் போஸ்ட் இணைய இதழ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தப்பிய விலங்குகள் சாதுவாகவும், வெகு தொலைவிற்குச் செல்லவில்லை என்றும் சர்கஸ் உரிமையாளர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.
சாலையில் கார்களுடன் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த விலங்குகளின் வீடியோவினை ட்விட்டரில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோரோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த விலங்குகளின் மற்றொரு வீடியோ மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் 10,000 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
இந்த விலங்குகள் பகலில் பூங்காக்களிலும், இரவில் அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்தியேக இணைப்பு பெட்டி போன்ற வாகனங்களிலும் வசிப்பதாக சர்கஸ் உரிமையாளர் கூறியுள்ளார். இந்த விலங்குகள் தப்பிய போது, அதனை உரிமையாளர் கைப்பற்றுவதற்கு இடையில் 15 நிமிடங்களே இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
2017-ல் இதே போல சர்கஸலிருந்து தப்பிய யானை ஒன்று, உணவு தேடி அலைந்துகொண்டிருந்த சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியிருந்து. அதற்கும் முன்னதாக 1916-ல் சர்கஸ் நோக்கத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட மேரி என்கிற ஆசிய யானை ஒன்று சர்கஸ் உரிமையாளரால் கொடூரமாக தூக்கிட்டு கொலை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.