This Article is From Oct 22, 2018

‘கருணாநிதியாலேயே முடியாதது ஸ்டாலினால் எப்படி முடியும்?’- முதல்வர் கேள்வி

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கும் பல்வேறு தடைகளை திமுக ஏற்படுத்தியது. அவற்றிலிருந்து இருவரும் மீண்டெழுந்து வந்தனர். அதைப் போலவே தற்போதைய அதிமுக-வும் மீண்டெழும்

‘கருணாநிதியாலேயே முடியாதது ஸ்டாலினால் எப்படி முடியும்?’- முதல்வர் கேள்வி

சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக-வை அழிக்க கருணாநிதி எவ்வளவோ முயன்றார். அவரால் கடைசி வரை அதை சாதிக்க முடியவில்லை. இந்நிலையில், ஸ்டாலினால் அதை எப்படி சாதிக்க முடியும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீப காலமாக திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாடுகளை சுமத்தி வருகின்றனர். குறிப்பாக பொதுப் பணித் துறை அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, சாலை போடுவதற்கான ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறி திமுக தொடுத்த வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அடுத்து அதிமுக மீதான பாய்ச்சலை திமுக தரப்பு அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் பேசிய பழனிசாமி, ‘திமுக-வில் அமைச்சர்களாக இருந்த 10 அல்லது 11 பேர் மீது பல்வேறு நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க இருக்கும் சிறப்பு நீதிமன்றங்களுக்குக் கீழ் விசாரணைக்கு வரும். அவர்கள் தண்டனை பெறுவார்கள்.

இதை மறைக்கத் தான் அதிமுக-வுக்கு எதிராகவும், நம் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து ஊழல் வழக்கை தொடுத்து வருகிறது திமுக. அவர்கள் அதிமுக-வை அழிக்கும் நோக்கில் தான் இதைப் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். கருணாநிதியாலேயே அவர் வாழ்நாள் முழுவதும் சாதிக்க முடியாததை, அவர் மகள் ஸ்டாலின் எப்படி சாதிப்பார்?

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கும் பல்வேறு தடைகளை திமுக ஏற்படுத்தியது. அவற்றிலிருந்து இருவரும் மீண்டெழுந்து வந்தனர். அதைப் போலவே தற்போதைய அதிமுக-வும் மீண்டெழும்' என்று பேசியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.