ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து பேசிய முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் பி.எஸ்.தனோவா, இதுபோன்ற சர்ச்சைகள் ஆயுதங்கள் கையகப்படுத்துதல்களை தாமதமாக்குகின்றன, இது ஆயுதப்படைகளின் திறன்களை பாதிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
பாலகோட் தாக்குதலின் போது, மிக்-21ல் சென்றதற்கு பதிலாக அபிநந்தன் ரபேலில் சென்றிருந்தால் போரில் நிலைமை வேறாக இருந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மும்பை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விமானப்படை முன்னாள் தளபதி தனோவா, ரஃபேல் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் ஒரு "சிறந்த தீர்ப்பை" வழங்கியது. ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும் என்பதை நான் எப்போதும் தனிப்பட்ட முறையில் பார்த்து வருகிறேன். இதனால், மற்ற கோப்புகளும் மெதுவான வேகத்தில் நகரத் தொடங்குகின்றன.
விமான கொள்முதலில் 10 ஆண்டு தாமதத்தால் ரபேலுக்கு பதில் மிக்-21ல் அபிநந்தன் பறக்க நேரிட்டது. அதேவேளையில், வரி செலுத்துபவர்களின் பணம் என்பதால், போர் விமானங்களின் விலை பற்றி கேள்வி எழுப்ப மக்களுக்கு உரிமை உள்ளது” என்றார்.
போஃபர்ஸ் ஒரு நல்ல பீரங்கிதான். ஆனால் தற்போது ரஃபேலை கேள்வி கேட்பதை போலவே போஃபர்ஸும் சர்ச்சையில் சிக்கியது. போஃபர்ஸ்க்கு பிறகு நல்ல பீரங்கிகள் எப்போது வரும்? எஸ் -400 பெறுவது அரசாங்கத்தின் மிகச் சிறந்த ஒப்பந்தம். எஸ்-400 ஏவுகணை அமைப்பு ஒரு கேம் சேஞ்சர். பாதுகாப்பு கையகப்படுத்தல் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம்எனத் தெரிவித்தார்.
முன்னதாக, புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கினார். மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமானார்.