அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில், வரும் 5 ஆம் தேதி வரை சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுத்தது நீதிமன்றம்.
ஹைலைட்ஸ்
- ஐ.என்.எக்ஸ் வழக்கில் பணமோசடியில் சிதம்பரம் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
- கடந்த ஒரு வாரமாக சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார் சிதம்பரம்
- தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் சிதம்பரம்
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் வரும் திங்கட்கிழமை வரை, சிபிஐ கஸ்டடியிலேயே இருக்கிறேன் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். கடந்த வாரம் பரபரப்பான சூழலில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு, அதன் பிடியிலேயே வைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்விடம் சிதம்பரத்தின் மனு அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து செப்டம்பர் 2 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது சிபிஐ கஸ்டடி விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை என்றால், அவர் டெல்லியில் உள்ள திகார் சிறைக்கு அனுப்பப்படுவார்.
சிதம்பரத்தின் இந்த கோரிக்கைக்கு நீதிபதிகள் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில், வரும் 5 ஆம் தேதி வரை சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுத்தது நீதிமன்றம்.
நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி, ‘ரிமாண்டு மனு வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிதான் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளதால், அதுவரை சிதம்பரம் சிபிஐ கஸ்டடியிலேயே இருக்க நினைக்கிறார்' என்று தெரிவித்தனர்.
இதற்கு அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். கஸ்டடியை நீட்டிக்கும் அதிகாரம் டிரையல் நீதிமன்றத்துக்கு மட்டும்தான் இருக்கிறது என்று வாதிட்டார். டிரையல் நீதிமன்றத்தில்தான் அது குறித்தான வழக்கு நிலுவையில் உள்ளது.
வழக்கு விசாரணையின்போது துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்து பண மோசடி செய்யப்பட்டு வந்தது என்பதை காண்பிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. எனவே சிதம்பரத்திற்கு எந்தவித பாதுகாப்பையும் வழங்கக் கூடாது. அவரை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்று வாதாடினார்.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மொத்த விஷயத்திலும் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றங்களையும் மறுத்துள்ள சிதம்பரம், தன்னை விடுவிக்கக் கோரியும் முறையிட்டுள்ளார். “அரசு, இதுவரை என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டேன். அதனால் என்னை விடுதலை செய்ய வேண்டும். என்னை கைது செய்வது என்பது அவமானப்படுத்துவதற்கு செய்யப்படும் வேலையாகும்” என்று நீதிமன்றத்திலும் அவர் தெரிவித்துள்ளார்.
(PTI தகவல்களுடன் எழுதப்பட்டது)