This Article is From Oct 25, 2019

தமிழ் ராக்கர்ஸை மிஞ்சிய வேகம்!! அதிர்ச்சியில் பிகில் படக்குழு!!

சிறப்புக்காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டுள்ள நிலையில், அதற்குள் படத்தின் முக்கிய காட்சிகள் இது போன்ற சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருவது படக்குழுவினரை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸை மிஞ்சிய வேகம்!! அதிர்ச்சியில் பிகில் படக்குழு!!

ஹலோ, சேர்சேட், டிக்-டாக் போன்ற செயலிகளில் பிகில் முக்கிய காட்சிகள்!

பெரும் சர்ச்சைகளை கடந்து கடைசி நேரத்தில் திட்டமிட்டபடி, தமிழகத்தில் இன்று பிகில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் ஒப்பனிங் காட்சிகள், மாஸ் சண்டை காட்சிகள் போன்ற முக்கியமாக காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில், நடிகர் கார்த்தி நடித்திருக்கும் கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் (25-ம் தேதி) திரைக்கு வந்துள்ளன. 

இதையொட்டி தமிழகத்தில் பெரும்பான்மையான திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி, 4 மணி என ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நேரங்களில் ரசிகர்கள் சிறப்புக்காட்சிகளுக்கு திரையரங்குள் ஏற்பாடு செய்திருந்தது.

ரசிகர்களும் இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்திருந்தனர். படம் ரிலீஸ் ஆகும் இன்றைய தினத்திற்கான (25-ம் தேதி) டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்பனையானது. 

இதனிடையே, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை திரையரங்குகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார். 

இதனால், விஜய் ரசிகர்கள், தயாரிப்புக் குழு, திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர். சிறப்புக்காட்சி ரத்து செய்யப்பட்டால், பெரும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன என தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தால் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, நேற்று வரை சிறப்புக்காட்சிகளுக்கு சிக்கல் நிலவிய சூழலில், இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்போது, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், பெரும் சர்ச்சைகளை கடந்து இன்று அதிகாலை திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பிகில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. இதனை காண திரையரங்குகளுக்கு குவிந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என பிகில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, படக்குழுவினருக்கு வேறு ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹலோ, சேர்சேட், டிக்-டாக் போன்ற செயலிகளில் பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் ஒப்பனிங் காட்சிகள், மாஸ் சண்டை காட்சிகள் போன்ற முக்கியமாக காட்சிகள் வெளியாகியுள்ளது. 

சிறப்புக்காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டுள்ள நிலையில், அதற்குள் படத்தின் முக்கிய காட்சிகள் இது போன்ற சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருவது படக்குழுவினரை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸில் திரைப்படம் வெளியாகமல் இருப்பதில் முனைப்பு காட்டி வரும் திரைத்திறையினர், தமிழ் ராக்கர்ஸை மிஞ்சிய வேகத்தில் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 
 

.