வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபனி(Fani) புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலினால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபனி புயல் வடமேற்குத் திசையில் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும், ஏப்ரல் 30 ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்குத் திசை நோக்கி அது நகர ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நேற்று ஃபனி புயல் சென்னையிலிருந்து 1,050 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், ‘தமிழகத்துக்குப் புயல் எச்சரிக்கை கிடையாது. தமிழ்நாடு கடற்கரையை ஃபனி கடப்பதற்கான வாய்ப்பு இல்லை' என்று கூறியுள்ளார்.
மே 3 ஆம் தேதி வாக்கில் ஃபனி புயல் தீவிரமடைந்து, ஒடிசாவில் மழையைப் பொழியலாம். இதையொட்டி ஒடிசா மாநில அரசு, மீட்புப் படைகளை உஷார் நிலையில் இருக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களில் புயல் காற்றின் வேகம் 175 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் புயல் காற்றின் தாக்கம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளை ஒட்டி சாதகமான சூழல் இல்லை என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.