கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் முன்வைக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் குறித்து ஒரு நாள் முன்னதாகக்கூட எவ்வித முன் தகவலையும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கவில்லை என தேசிய மாநாட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஃபாரூக் அப்துல்லா, காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்திய அரசாங்கத்தை இனி யாரும் நம்ப முடியாது. அவர்கள் பொய் சொல்லாத ஒரு நாள் கூட இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்னதாக தான் பிரதமரை சந்தித்ததை ஃபாரூக், “ஒரு நாள் முன்பு நான் பிரதமரை சந்தித்தேன், அவர் எங்களுக்கு எந்தக் குறிப்பும் கொடுக்கவில்லை. பல ராணுவ துருப்புக்கள் அதிரடியாக ஜம்மு-காஷ்மீர் குவிக்கப்பட்டது குறித்தும், சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்படுவதையும், அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமரிடம் கேள்வியெழுப்பினேன். இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானுடனான போர் போன்ற சூழலை ஏற்படுத்தியிருந்தது.” என்று நினைவுக்கூர்ந்துள்ளார்.
மேலும், “நாங்கள் பிரதமரிடம் கேட்டபோது, அவர் எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவர் இந்த நேரத்தில் தான் எதுவும் சொல்லக்கூடாது என்று நான் நினைக்காத பிற விஷயங்களைச் சொன்னார். அவர் முற்றிலும் கனிவானவர், நல்லவர், நம்பமுடியாதவர்.” என்றும் ஃபாரூக் கூறியுள்ளார்.