மக்களவை தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில் அவரை கடுமையாக விமர்சித்து இணைய தளத்தில் வீடியோ வெளியிடப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. ஆனால் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய மதசார்பற்ற தள கட்சிக்கு ஒரேயொரு இடம் மட்டுமே கிடைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கட்சி தொண்டர்கள் கட்சியை விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக கட்சித் தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதா அம்ரீஷிடம் தோல்வியடைந்தார். 1,25,876 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் மகனே தோல்வியடைந்திருப்பது மதசார்பற்ற ஜனதா தள தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் குமாரசாமியை விமர்சித்து வீடியோ வெளியானது. இது பேஸ்புக்கில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 2 சிதராஜு, சாமா கவுடா என்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 406, 420, 499 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.