Read in English
This Article is From Jul 10, 2018

தாய்லாந்து குகையில் சிக்கிய குழு: கடைசி 5 பேரும் ஒரே நேரத்தில் மீட்கப்பட உள்ளனர்!

தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர்

Advertisement
உலகம்
BANGKOK/CHIANG RAI:

தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், முதலாவதாக அவர்களில் 4 பேரை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர் மீட்புப் படையினர். அடுத்த 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்டனர். 2 நாட்களில் 13 பேரில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடைசியாக இருக்கும் 5 பேரையும் ஒரே நேரத்தில் மீட்டுக் கொண்டு வர மீட்புக் குழு தயாராகி வருகிறது. 

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி சிறுவர்கள் நிறைந்த ‘வைல்டு போர்ஸ்’ கால்பந்து அணி, தங்களது பயிற்சியாளருடன் தாய்லாந்தில் இருக்கும் சியாங் ராய் பகுதியில் உள்ள தம் லுவாங் குகைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் அவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டுள்ளனர். தாய்லாந்தில் ஜூலை மாதங்களில் அடை மழை பெய்யும். இந்த நேரத்தில் தம் லுவாங் குகைக்குள் செல்வது பாதுகாப்பனதல்ல என்று கூறப்படுகிறது. ஆனால், கால்பந்து குழுவினர் சரியாக இந்த நேரத்தில் சென்றது தான் அவர்கள் உள்ளேயே மாட்டிக் கொண்டதற்குக் காரணமாக இருந்துள்ளது. சிறுவர்கள் அனைவரும் பதின் பருவத்தினர்.

இந்த விவகாரம் தாய்லாந்தில் மட்டுமல்ல உலக அளவில் கவனம் பெற்றது. சம்பவம் குறித்து வெளியே தெரிய ஆரம்பித்த உடன், உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காகவே பயிற்சி பெரும் நபர்கள் சிறுவர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர். பல நாட்டு அரசுகளும் சிறுவர்களை மீட்க நிபுணர்களை அனுப்பி வைத்தது.

இந்நிலையில் 9 நாட்கள் கழித்து, குகையில் இருந்த 12 சிறுவர்கள் மற்றும் 25 வயதாகும் அவர்களின் கோச் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், குகையிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வருவது மிகுந்த சவால் நிறைந்தது என்று சொல்லப்பட்ட நிலையில், இரண்டு  நாட்கள் 4 சிறுவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணி தொடங்கப்பட்டது. அவர்கள் நால்வரும் தற்போது பத்திரமாக உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குகையிலிருந்து 4 சிறுவர்களும் வெளியே வந்த உடன் அவர்களை அங்கு தயார் நிலையிலிருந்து மருத்துவக் குழு பரிசோதித்தது. பின்னர், ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் சியாங் ராய் பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று, மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களும் ஆம்புலன்ஸ் மூல்ம மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மீட்புக் குழு அனைத்து சிறுவர்களும் மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவே கூறியுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட எந்த சிறுவர்களைப் பற்றிய தகவல்களும் வெளியே சொல்லப்படவில்லை. காரணம், மீட்கப்படாத மற்ற சிறுவர்களின் குடும்பங்கள் அவதிக்குளாகக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. மேலும், சிறவர்கள் அவர்களின் குடும்பத்தாரைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்ல. குகைக்குள் 2 வாரங்கள் சிக்கியிருந்ததால், அவர்களுக்கு தொற்று நோய் ஏதாவது வந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகப்படுகின்றனர். இது மற்றவர்களுக்குப் பரவக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடாம்.

முதல் 4 சிறுவர்களை மீட்க அதிக சிரம்பபட்டதாக மீட்புக் குழு தெரிவித்த நிலையில், அடுத்த 4 பேரை மீட்பது சற்று சுலபமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவதாக மீட்கப்பட்ட 4 பேரும் 9 மணி நேரத்தில் குகையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர். ஒரு சிறுவனுக்கு 2 டைவர்கள் வீதம் மீட்புப் பணியின் போது உடன் இருக்கின்றனராம். மொத்தம் 18 டைவர்கள் இந்த விஷயத்துக்காக ஈடுபட்டுள்ளனர். டைவர்களைத் தவிர, 100 மீட்புப் படயினரும் குகையின் ஆங்காங்கே மீட்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

அனைத்து விஷயங்களும் சரியாக சென்றிருக்கும் நேரத்திலேயே கடைசி 5 பேரையும் குகையிலிருந்து மீட்டுக் கொண்டு வர தயாராகி வருகின்றனர் ரெஸ்க்யூ குழு. இதற்கான நடவடிக்கை இன்று ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டுள்ளார் தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்- ஓச்சா. இதையடுத்து அவர் அதிகாரிகளிடம், ‘இனி இது போன்ற ஒரு சம்பவம் தாய்லாந்து மண்ணில் நடக்கவே கூடாது’ என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement