முன்னாள் தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாயை, மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த நியமனத்தைத் தான் ஏன் ஏற்றுக்கொண்டேன் என்பது தொடர்பாக உறுதி மொழி ஏற்ற பின்னர் கூறுகிறேன் என்று ரன்ஜன் கோகாய் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அஸ்ஸாமில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாய், நாளை நான் டெல்லி சென்று முதலில் உறுதி மொழி ஏற்றுக்கொள்கிறேன். பின்னர், ஊடகங்களுக்கு நான் ஏன் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டேன் என்பது தொடர்பாகக் கூறுகிறேன் என்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்களாகப் பொறுப்பு வகித்த ரன்ஜன் கோகாய், கடந்த அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்தபோது, 2018 ஜனவரியில் முதன்முதலில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இவரும் ஒருவர் ஆவார். நீதிபதி தீபக் மிஸ்ரா தனக்கு "விருப்பமான நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதாகவும், "ஜூனியர் நீதிபதிகளுக்கு முக்கியமான வழக்குகளை ஒதுக்குவதாகவும் அப்போது, அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
மாநிலங்களவைக்கு இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூகசேவை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமன உறுப்பினராக நியமிப்பது வழக்கம். இதுவரை மாநிலங்களவைக்கு எந்தவொரு தலைமை நீதிபதியும் குடியரசுத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்டதில்லை.
இதற்கு முந்தைய காலங்களில், முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரானார். 1991ல் ஓய்வு பெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா 1998ல் மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்டு 2004 வரை பதவி வகித்தார். பின்னர், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் நரேந்திர மோடி அரசால் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதேபோல், முன்னாள் நீதிபதி பஹருல் இஸ்லாம் கவுஹதி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு மாநிலங்களவை எம்.பியாக பதவி வகித்தார். பின்னர், 1980ல் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது, நகர்ப்புற கூட்டுறவு வங்கி ஊழலில் அப்போதைய பீகார் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவை விடுவித்தார். அதன் பின்பு அவர் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தலைமை நீதிபதியான ரன்ஜன் கோகாய், அயோத்தி வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கிய அரசியலமைப்பு அமர்வுக்குத் தலைமை தாங்கினார். அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தைக் கோவிலுக்கு ஒப்படைத்து, அயோத்தியில் மாற்று இடத்தில் மசூதிக்கு 5 ஏக்கர் வழங்கி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.