இந்தியாவின் முதல் பிரதமரான நேருவுக்கு டெல்லியில் அவர் நினைவாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இந்தியாவின் அனைத்து பிரதமர்களையும் நினைவுகூறும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதையொட்டித்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘தற்போது தீன் மூர்த்தி காம்ப்ளக்ஸில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது. நேரு என்பவர் காங்கிரஸுக்கு மட்டுமல்ல மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானவர். அடல் பிஹாரி வாஜ்பாய், பிரதமராக இருந்த போது கூட, நேரு அருங்காட்சியகத்துக்கோ நூலகத்துக்கோ எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், இந்த அரசுக்கு அதில் மாற்றம் ஏற்படுத்துவது ஒரு கொள்கையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இந்தியாவின் முன்னேற்றத்தில் மட்டும் நேரு பங்களிக்கவில்லை. உலக அளவிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தியவர். 1920 முதல் 1940 வரை நேரு 10 ஆண்டுகள் நாட்டின் சுதந்திரத்துக்காக சிறையில் இருந்தவர் நேரு. அவரின் மேன்மையைப் போற்றும் வகையில் அருங்காட்சியகம் தொடர்ந்து அங்கு இருந்திட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் அனைத்து இந்திய பிரதமர்களுக்கும் அருங்காட்சியகம் அமைக்கும் தனது திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே ஆரம்பித்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதற்கென, 270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.