பாதுகாப்பு படையினர் உதவியுடன் வெளி மாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொந்த ஊருக்கு செல்லும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு முறையான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும் என்று யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
வெளி மாநில தொழிலாளர்கள் பிரச்னையை மத்திய மாநில அரசுகள் சரியாக கையாளவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது அவர் அளித்த பேட்டியில்,'எங்களது கோரிக்கை மிக எளிமையானது. பாதுகாப்பு படையினர் உதவியோடு வெளி மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.' என்று தெரிவித்தார்.
கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் தனது போராட்டம் தொடரும் என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.