மும்பை டோங்கிரியில் இருக்கும் 100 ஆண்டு கால பழமையான 4 மாடி கட்டடம் இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்து காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இன்று காலை 11:40 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 பெரிய குழு, சம்பவ இடத்துக்குச் சென்று, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த வாரங்களில் மும்பையில் பெய்த கனமழையால் டோங்கிரியில் மழை நீர் தேங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த இடத்துக்கு 10 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகள் சென்றுள்ளன.
“எங்களுக்கு மிகவும் அதீத சத்தம் கேட்டது. எல்லோரும், ‘கட்டடம் இடிந்து விழுகிறது' என்று கத்தினார்கள். நானும் ஓடினேன். நிலநடுக்கம் வந்தது போல இருந்தது” என்று கட்டடம் இடிந்து விழுந்தபோது அருகிலிருந்த பதின் பருவ சிறுவன் NDTV-யிடம் தகவல் தெரிவித்தார்.
“நான் சில உடல்களைப் பார்த்தேன். அந்த கட்டடத்தில் 7, 8 குடும்பகள் இருந்தன” என்று இன்னொரு நபர் நம்மிடம் கூறினார்.
இந்த கட்டட விபத்தானது, ‘லெவல் 2' வகையைச் சேர்ந்தவை என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். லெவல் 1 சம்பவம் என்றால், மிகவும் ஆபத்தானது என்று அர்த்தம்.
கட்டடம் இடிந்த இடம், மிகவும் குறுகலான பகுதி என்பதால், மக்கள் சங்கிலித் தொடரில் நின்று, இடிபாடுகளை அகற்ற உதவினார்கள்.
“அந்த கட்டடம் 100 ஆண்டுகள் பழமையானது. அந்த இடத்தில் புதியதாக கட்டடம் கட்ட நாங்கள் அனுமதி அளித்திருந்தோம். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்குப் பிறகுதான், மறுகட்டமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்று தெரியவரும். தற்சமயம், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை மட்டும் மேற்கொண்டு வருகிறோம்” என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
உலக பொருளாதார ஃபோரம் அமைப்பின் தகவல்படி, உலகிலேயே வங்கதேசத்தின் தாக்கா நகருக்கு அடுத்து, மும்பைதான் அதிக ஜன நெருக்கடி உள்ள பகுதி. மும்பை நகரத்தில், கட்டட பாதுகாப்பு என்பது எப்போதும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது.
கடந்த மே மாதம் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அமைப்பு, நகரத்தில் 499 கட்டடங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிவித்தது.