This Article is From Aug 21, 2019

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரான்ஸ்!

"காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புகள், பதற்றத்தைத் தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரான்ஸ்!

பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்-வெஸ் லெ டிரியன், பாகிஸ்தான் அமைச்சர் குரேஷியுடன் இன்று தொலைபேசி மூலம் பேசியுள்ளார்

New Delhi:

பிரான்ஸ் அரசு தரப்பு, பாகிஸ்தான் வெளியவுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளது. ‘காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும். உரசலை அதிகரிக்கும் நோக்கில் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது' என்று பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது. 

பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்-வெஸ் லெ டிரியன், பாகிஸ்தான் அமைச்சர் குரேஷியுடன் இன்று தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இது குறித்த அறிக்கையை பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. 

அந்த அறிக்கையில், “காஷ்மீர் விவகாரத்தில் பிரான்ஸின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் டிரயன் தெளிவாக எடுத்துரைத்தார். இரு நாடுகள் மட்டுமே அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புகள், பதற்றத்தைத் தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரசல் போக்கை அதிகரிக்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்தும் கடும் அதிருப்தியில் இருக்கிறது பாகிஸ்தான். இந்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச அளவில் அழுத்தத்தை அதிகரிக்க பாகிஸ்தான் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. 

 ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் இருக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. 

முன்னதாக பாகிஸ்தான், ஐ.நா. சபையில் இந்த விவகாரத்தை கொண்டு சென்றது. அங்கு பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில் சீனாவைத் தவிர்த்து மற்ற எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இதனால் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்குப் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “காஷ்மீர் மிகவும் சிக்கலான பகுதி. அங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் உள்ளனர். இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இந்த விவகாரத்தில் என்னால் முடிந்தவரை மத்தியஸ்தம் செய்ய முயல்வேன். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் இரு நாடுகள் கடந்த பல ஆண்டுகளாக நல்ல நட்புறவுடன் இருக்கவில்லை. வெளிப்படையாக செல்வதென்றால் அங்கு அபாயகரமான நிலைதான் உள்ளது” என்று வெள்ளை மாளிகளையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். 

இன்னும் ஒரு சில நாட்களில் ஜி7 மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியிடம் பேசுவேன் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், மேலும் பேசுகையில், “காஷ்மீர் விவகாரத்தில் முடிந்தவரை உதவி செய்யத்தான் பார்க்கிறோம். ஆனால் சம்பந்தப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையில் அதிக பிரச்னைகள் உள்ளன. இருவருடனும் நாம் நல்ல நட்புறவோடு இருக்கிறோம். ஆனால் அவர்கள் இருவரும் அப்படி இருக்கிறார்கள் என சொல்வதற்கில்லை. அந்தப் பிரச்னைக்கு மதம் முக்கிய காரணம். மதம் மிகவும் சிக்கலான விஷயம்” என்று தெரிவித்தார்.

.