This Article is From May 15, 2020

மே.18ம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் செயல்படலாம்!

ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அலுவலகம் பணிக்கு வராத ஊழியர்கள் மின்னணு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும். 

மே.18ம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் செயல்படலாம்!

மே.18ம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் செயல்படலாம்!

தமிழ்நாட்டில் 50 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமைகளும் இனி அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24ம்தேதியில் இருந்து அமலில்
உள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள், அலுவலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. 

இதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பின்னர் 2வது கட்டமாக மே.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 3வது கட்டமாக மே.17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும், 3வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, (மே 3-ம் தேதி) பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளும் அளிக்கப்பட்டன. அந்த வகையில், அரசு அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, தற்போது, 3வது கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து, 4வது கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். 

இந்நிலையில், 50 சதவீத ஊழியர்களுடன் 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் வாரத்தின் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவில், ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

ஒரு குழு திங்கள், செவ்வாய் பணியாற்றினால் அடுத்த குழு புதன் வியாழன் பணியாற்றும். முதல் குழு வெள்ளி, சனி பணியாற்றும். இவ்வாறு சுழற்சி முறையில் பணியாற்றுபவர்கள் தேவைப்படின் அழைக்கும்போது பணிக்கு வருவார்கள்.

அலுவலகம் பணிக்கு வராத ஊழியர்கள் மின்னணு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

.