மகாராஷ்டிராவின் கட்சிரோலி(Gadchiroli blast) பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
கட்சிரோலி(Gadchiroli IED blast) பகுதியில்15 பேர் கொண்ட பாதுகாப்புப்படையினர் குழு ஒன்று போலீஸ் வாகனத்தில் சென்ற போது, அவர்களை குறி வைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய 15 பாதுகாப்புப்படை வீரர்களும் ஒரு ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்.11ஆம் தேதி நடந்த போது, மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே 150 மீட்டர் தொலைவில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் வெடிகுண்டு சத்தத்தால் கடும் பீதி அடைந்தனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் நிறுவன தினம் இன்ற கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, இன்று காலை கட்சிரோலி பகுதியில் சாலை பணிகளை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனத்தின் 27 இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைத்து எரித்தனர். இதைத்தொடர்ந்து, இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்.22 ஆம் தேதி 40 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நிகழந்து சரியாக ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், முதலாவது ஆண்டை நினைவுப்படுத்தும் வகையிலே மாவோயிஸ்டுகள் கடந்த சில நாட்களாக பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதேபோல், ஏப்.9 ஆம் தேதி சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் பாஜக எம்எல்ஏ உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.