பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இருப்பினும், டீசல், பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஆட்டோ மொபைல் துறை நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மையமாக இருப்பதாகவும், ஏற்றுமதிக்கு இந்த துறை வலிமை சேர்ப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
ஆண்டுவிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது-
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒருபோதும் வலியுறுத்தியது கிடையாது. அந்த எண்ணமும் அரசுக்கு இல்லை. ரூ. 4.50 லட்சம் கோடி மதிப்புடைய ஆட்டோ மொபைல் துறை, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாயப்பும், ஏற்றுமதிமதியில் முக்கிய பங்கையும் வகிக்கிறது.
இருப்பினும் எரிபொருள் விவகாரத்தில் அரசுக்கு சில பிரச்னைகள் இருக்கின்றன. முதலாவது பெட்ரோல், டீசல் தயாரிக்கப்பயன்படும் கச்சா எண்ணெயை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
அடுத்ததாக பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்னையையும் அரசு எதிர்கொள்ள நேரிடுகிறது. அடுத்ததாக பாதுகாப்பு பிரச்னை.
சுற்றுச் சூழல் மாசுக்கு வாகனங்கள் மட்டுமே காரணம் கிடையாது. டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டை வெளிநாடுகள் பலவும் விமர்சித்தது நினைவிருக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.