‘கஜா' புயல் இன்று தமிழகத்தில் கரையைக் கடக்க உள்ளது. கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையில் கஜா கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தில் பலத்த காற்றும் பெரு மழையும் பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகள் அலெர்ட்டில் இருக்கின்றன. இந்திய கடற்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - "இன்று கரையைக் கடக்கும் ‘கஜா' புயல்: அலெர்ட்டில் தமிழகம், புதுச்சேரி!"
கஜா புயலை சமாளிப்பதற்கு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது மாநில அரசு. குறிப்பாக, அதிகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில் 30,000 மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தமிழக கடலோரப் பகுதிகளில் 8 இடங்களில் உஷார் நிலையில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க - "கஜா புயல்: உஷார் நிலையில் இந்திய கடற்படை!"
இந்நிலையில் கஜா புயல் காரணமாக தமிழகத்தின் எந்தெந்த இடங்களில் அதிக மழை பெய்யும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ‘தமிழகத்தின் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்காலிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள சில இடங்களில் இன்று மட்டும் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பொழியலாம்.
மேலும் படிக்க - ‘கஜா' புயல்: முக்கியமான 10 தகவல்கள்!
அதேபோல கேரளா, ராயலசீமா மற்றும் தென் ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.