டெல்லியை கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி எம்.பி. காம்பீர் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தலைநகர் டெல்லி கடந்த சில வாரங்களாக காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சுவாசிப்பதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். காற்று மாசின் அளவைப் பொறுத்து பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், காற்று மாசு குறித்து விவாதித்து நடவடிக்கை எடுப்பதற்காக நாடாளுமன்ற கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த பட்டியலில் 29 எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களில் டெல்லியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 29 எம்.பி.க்களுக்கு பதிலாக மொத்தமே 4 பேர் மட்டுமே வருகை தந்தார்கள். இதனால் இந்த கூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
நாட்டின் தலைநகர் அசாதாரணமான சூழலில் உள்ளபோது, உயர்மட்டக் கூட்டத்தை எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் விமர்னத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கவுதம் காம்பீரை ஆம் ஆத்மி கட்சி கிண்டல் செய்து, ட்விட்டர் பதிவினை வெளியிட்டிருக்கிறது. அந்த பதிவில், 'குறை சொல்லும் வழக்கத்தை விட்டு விட்டு, மாசுக் கட்டுப்பாடு தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளது.
வங்க தேசத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இதில் வர்ணனையாளராக கவுதம் காம்பீர் பணியாற்ற வருகிறார்.
உயர்மட்ட எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜகவின் ஜெகதாம்பிகா பால், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், தேசியவாத காங்கிரசின் ஹஸ்னைன் மசூதி, பாஜகவின் சி.ஆர். பாட்டீல் ஆகிய 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.