சமூக வலைதளங்களில் பல பிரபலங்கள் வெளிப்படையாக கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
New Delhi: பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பிரபல இளம் கிரிக்கெட் வீரர் ரவிந்திரா ஜடேஜா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி நன்றியும் வாழ்த்துக்களையும் கூறியிருக்கிறார்.
நாட்டில் மக்களவை தேர்தல் கடந்த 11-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக பொதுவாக பிரபலங்கள் வெளிப்படையாக அறிவிப்பது கிடையாது. இது அவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், ஆதரவை வெளிப்படையாக அறிவிப்பதில் அவர்கள் விருப்பம் காட்டுவதில்லை.
இதற்கு சிலர் விதிவிலக்கு என்கிற அடிப்படையில், அரசியல் கட்சிகளை ஆதரித்து சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டருமான ரவிந்திரா ஜடேஜா பிரதமர் மோடியயையும், பாஜகவையும் ஆதரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘நான் பாஜகவை ஆதரிக்கிறேன். ஜெய்ஹிந்த்' என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, ‘நன்றி ரவிந்திரா ஜடேஜா. 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் நீங்கள் இடம்பெற்றதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
கடந்த 11-ம்தேதி நாட்டில் மக்களவை தேர்தல் தொடங்கியது. அப்போது ஆந்திரா, தெலங்கானா, வடகிழக்கு மாநிலங்களில் சில பகுதிகள், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்த கட்டமாக நாளை மறுதினம் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.