வாக்கு இயந்திர பாதுகாப்பு அறைக்கு வெளியில் திங்கள் முதல் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்துள்ளனர்.
New Delhi: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்து நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக, வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூகவலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாக பரவின.
இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை 24மணி நேரமும் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் தீவிர கண்காணிப்புக்கு அமர்த்தியுள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், நேற்றிரவு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை நேரில் சென்று பார்வையிட்டனர்.
முன்னதாக, 50 சதவீத வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக நேற்று 22 எதிர்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் ஒன்று சேர்ந்து மனு அளித்தனர். அதில், முதலில் 5 விவிபேட் சீட்டுகளை முதலில் சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், வாக்கு எண்ணிக்கையை முறையாக நடந்த வேண்டும் என்றும், சர்ச்சைக்குள்ளான 5 மாநிலங்களில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பியும், 22 எதிர்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நேற்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
சண்டிகார் மாநிலத்தில், வாக்கு இயந்திர பாதுகாப்பு அறைக்கு வெளியில் திங்கள் முதல் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்து கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை அரசியல் கட்சிகளில் பிரதிநிதிகள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமர்ந்து கண்காணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.