This Article is From Jan 23, 2019

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவக்கம்!

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரமாண்டமான முறையில் தொடங்குகிறது.

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று துவக்கம்!

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரமாண்டமான முறையில் தொடங்குகிறது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அம்மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்க 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நிறைவு நாள் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளார். மொத்தமாக 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இதற்காக 3 முறை அமைச்சரவையும் கூடி முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதியும், 2-வது அமைச்சரவை கூட்டம் இம்மாதம் 3-ந் தேதியும் நடந்து முடிந்த நிலையில், 30 தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தொழிற் துறை பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, தேசிய அளவில் பிரபல தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் தொழில் அமைப்பினரும் இம்மாநாட்டுக்கு திரளாக வர உள்ளனர். வாகனம், மென்பொருள், ஜவுளி ஆகிய துறைகளில் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் உறுதிமொழி அளித்த முதலீடுகளே இன்னும் நிறைவேறாத நிலையில், கமிஷன் வாங்கவும், கொள்ளை அடிக்கவும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு என்ற ஒரு நாடகத்தை நடத்துகிறார்கள் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

.